தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாகசென்று கொடுங்கையூரில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே 1.05 மணியளவில் தனது பிரசாரத்தை தொடங்கிய விஜய் 1.20 மணிக்கு பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு புறப்பட்டார்.
விஜய் புறப்பட்ட செய்தி அறிந்து கொளத்தூரில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால் பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு ஊர்வலமாக தனது பிரசார வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக் கொண்டே சென்றார்.
இதனால் 1.20 மணியளவில் பெரம்பூரில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 3.40 மணியளவில் கொளத்தூர் அகரம் சந்திப்பிற்கு சென்றார். அங்கு மாலை 3.40 மணியளவில் பேச்சை தொடங்கிய விஜய் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
போலீசார் குறித்து கொடுத்த குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசார வாகனத்தை நிறுத்தாமல் சாலையின் நடுவே பிரசார வாகனத்தை நிறுத்தி பேசியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தனக்கும், பொதுமக்களுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லை எனக் கூறி வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்து விஜய் விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
இதனிடையே, தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார், நேற்றைய பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வீடியோ ஆதாரங்களுடன் அளித்த புகாரில் தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் இன்று காலை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் விஜய் இரண்டாவதாக போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் ஏப்.2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு அவர் பிரசாரம் மேற்கொள்ள தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
வரும் ஏப்.2ம் தேதி, தவெக தலைவர் விஜயின் திருச்சி வருகைக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகி செங்கோட்டையன் திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
திருச்சியில், பாலக்கரை, மரக்கடை உள்ளிட்ட 4 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.


