கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 9ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்திற்காக 2 நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.
அதன்படி, முதல் நாளான நேற்று பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
நேற்று கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த நிலையில், 2வது நாளான இன்று கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்லும் ராகுல் காந்தி பேராம்பிரா, பாலுசேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, கண்ணூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனிடையே, பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நடிகை குஷ்பு இன்று கோழிக்கோடு செல்கிறார்.
இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினரான மரியம் தாவ்லேவும் கேரளா சென்றுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கேரளாவில் பாஜவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதனை அக்கட்சியின் தேசிய தலைவரான நிதின் நபின் வெளியிடுகிறார்.


