தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
திமுக, அதிமுக, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, ஒப்பந்தம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத் தாக்கல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8, சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 5, மதிமுகவுக்கு 4 ( 3 உதயசூரியன்), ஐயூஎம்எல் 2 (ஏணி), மமகவுக்கு 2 (உதயசூரியன்), கொமதேகவுக்கு 2 (உதயசூரியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல, எஸ்டி பிஐ கட்சி, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் ஆகிய 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுக இதுவரை 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, திமுக 164 போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் களம் காண உள்ளது.
மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளார். சீர்காழி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அத்தொகுதியின் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ தெரிவித்துள்ளார்.


