தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியையும், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் கட்சியையும் தொடங்கினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்ற சசிகலா வெளியே வந்த பின்பு, அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே நேரம், கடந்த 2022ம் ஆண்டு திவாகரன் அவரது கட்சியை சசிகலா தலைமையின் கீழ் கொண்டு வந்தார்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக சசிகலா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சசிகலா தன்னுடைய புதிய கட்சியின் பெயரை ’அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என அறிவித்ததுடன், 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகப்பட்டுத்தினார்.
இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய சசிகலா கூட்டணியை உறுதிசெய்தார்.
இதனிடையே, மார்ச் 18 முதல் 23ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சசிகலா வெளியிட்டார்.
அதில், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ச.வெள்ளத்துரைக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர், ஆலங்குளம் தொகுதிகளும், வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனர் அண்ணா சரவணனுக்கு நன்னிலம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 38 தொகுதிகளில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வி.கே.சசிகலா வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக போட்டியிடும் என்று சசிகலா அறிவித்துள்ளார்.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாரை அறிவித்திருந்த நிலையில், பாமகவின் வேண்டுகோளுக்கிணங்க வேட்பாளரை திரும்ப பெறுவதாக சசிகலா அறிவித்தார்.
கூட்டணி கட்சிகளுக்கு திருவாடானை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 6 தொகுதிகளை சசிகலா ஒதுக்கினார். சிவகங்கையில் வி.பிரபு போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது முருகானந்தம் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்


