தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளி மண்டலத்தில், கிழக்கு உ.பி. முதல் தென் தமிழகம் வரையில் விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வுப்பாதை ஒன்று நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், கோடைக்காலத்துக்கான நீண்ட கால வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது வெப்பநிலையில் இருந்து ஓரளவுக்கு நிவர்த்தி அளித்தாலும், வடக்கு மற்றும் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இயல்பைவிட அதிக வெப்பநிலையுடன் கூடிய வெப்பஅலை நீண்ட நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.
வெப்ப அழுத்தத்தினால் மாநிலம் முழுவதும் அதிகபட்சமாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகக் கூடும். இதனால் அதிக வெப்பமான சூழ்நிலை காணப்படுவதுடன், இரவு நேர குளிர்ச்சியும் குறையும்.
ஒட்டுமொத்தமாக இந்த ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பம் தகிக்கும் மாதமாக இருக்கும். இடையிடையே மழை பெய்தாலும் வெப்பத்தால் ஏற்படும் அசாதாரண நிலை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.


