ஐபிஎல் 19வது டி20 தொடரின் போட்டிகள் கடந்த 28ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டிகள் இரண்டு கட்டமாக நடக்கும் நிலையில், முதல் போட்டியில் ஐதராபாத்தை நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வாகை சூடியது.
அதைத் தொடர்ந்து, நடந்த 2வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையடுத்து, கவுகாத்தியில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இந்நிலையில், 4வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். சாய் சுதர்சன் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்ததாக, 37 ரன்களுடன் சுப்மன் கில்லும் வெளியேறினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் 38 ரன், கிளின் பிலிப்ஸ் 25 ரன்னில் அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக வைசாக் 3 விக்கெட்டும், சாகல் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் கூப்பர் கானலி 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம், 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் தனது அடுத்த போட்டியில் வரும் 3ம் தேதி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும், குஜராத் டைட்டன்ஸ் 4ம் தேதி அகமதாபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் மோதுகின்றன.


