மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் வினியோகம் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், எரிவாயு விலை உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, விமான எரிபொருள் கட்டணங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், பயணிகளின் விமான டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு விதித்திருந்த தடையை ஒன்றிய அரசு தளர்த்தியது.
இதையடுத்து, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ளூர் விமானக் கட்டணங்கள் இன்று முதல் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னதாக இருந்த கட்டணத்தை விட ஏறக்குறைய இருமடங்காக அனைத்து விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல குறைந்தபட்சம் ரூ.3,608 ஆக இருந்த விமான கட்டணம், இன்று முதல் குறைந்தபட்சமாக ரூ.6,503 ஆக அதிகரித்துள்ளது.
அதே போல், கடந்த ஜனவரியில் சென்னையில் இருந்து மதுரை செல்ல, குறைந்தபட்சம் ரூ.3,129 ஆக இருந்த விமான கட்டணம், தற்போது குறைந்தபட்சமாக ரூ.5,467 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,608 ஆக இருந்த நிலையில், இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,521 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த ஜனவரி மாதம் குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.4,351 ஆக இருந்தது. தற்போது இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,966 ஆக அதிகரித்துள்ளது.
அதே போல், கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல குறைந்தபட்சம் ரூ.5,933 ஆக இருந்த விமான கட்டணம், இன்று முதல் குறைந்தபட்சமாக ரூ.6,496 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,356லிருந்து இன்று முதல் ரூ.4,020 ஆகவும், சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,293ல் இருந்து இன்று முதல் ரூ.6,047 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பழைய கட்டணங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், அவர்கள் போர்டிங் பாஸ் வாங்குவதற்கு முன் கூடுதல் கட்டணத் தொகைகளை, ஆன்லைன் மூலமாக செலுத்துவற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இருப்பினும், தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் உள்ளூர் விமானங்கள் குறைந்த எண்ணிக்கை பயணிகளுடன் இயக்கப்படுவதால் இந்த கட்டண உயர்வுகள் மிக அதிகமாகவும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் உள்ளூர் விமானங்கள் அதிகளவு பயணிகளுடன் இயக்கப்படுவதால் கட்டண உயர்வு ஓரளவு குறைவாக உள்ளதாகவும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


