ஐபிஎல் 19வது டி20 கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி லக்னோவின் ஏகானா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினர். தொடக்கம் முதல் சொதப்பிய ரிஷப் 7 ரன்களில் ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் அய்டன் மார்க்ரம் 11 ரன்னில் அக்சர் படேலிடம் கிளீன் போல்டானார்.
அவரைத் தொடர்ந்து ஆயுஷ் படோனி ரன் எடுக்காமல், நடராஜனின் பந்துவீச்சில் அவுட்டானார். அதன் பின் வந்த நிகோலஸ் பூரன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், நிகிடி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.
அதுவரை நிலைத்து ஆடிக் கொண்டிருந்த மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மிட்செல் 35, அப்துல் சமது 36 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருப்பினும், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் லக்னோ அணி 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, முதலில் களம் இறங்கிய லக்னோ அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இதையடுத்து, 142 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில், அதிரடி வீரர் கே.எல்.ராகுல் ரன் ஏதுமின்றி முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 15 ரன்களும், நிசங்கா 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதனால், 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.
ஆனால், அதன் பிறகு இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். சமீர் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 70 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்தும், ஸ்டப்ஸ் 39 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் டெல்லி அணி 17.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், அந்த அணி 6 விக்கெட் வித்தியாத்தில் லக்னோவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
டெல்லி தரப்பில் நடராஜன், நிகிடி தலா 3 விக்கெட்டுகளையும்குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதே போல், லக்னோ தரப்பில் பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


