தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கட்சிகள் அவற்றின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட கூட்டணி பேரத்தை முடித்து விட்டு, வேட்பாளர் அறிவிப்பும் முடிந்து தற்போது தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தரப்பில் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் அவரது பரப்புரையைத் தொடங்கினார்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்டப்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
இதைத் தொடர்ந்து திருச்சி உழவர் சந்தை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் முழு சங்கியாகவே மாறிவிட்டதாகவும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பிரதேசம் என மாற்றக்கூட தயங்க மாட்டார்கள் என்றும் விமர்சித்தார்.
அதே போல், சிவகங்கையில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார். மேலும் பாஜகவுடன் திமுகவும் கூட்டணி வைத்திருந்ததாகவும் அப்போது வாஜ்பாயை சந்திக்க கருணாநிதி 6 மணி நேரம் காத்திருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
கரூரில் நேற்று மாலை பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், பாஜகவுடனான திமுக கூட்டணி குறித்த இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி வைத்தோமே தவிர, கட்சியை அடகு வைக்கவில்லை என ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
முன்னதாக, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மிக்ஸி, பிரிட்ஜ் போன்ற எந்த இலவசங்களையும் தர மாட்டேன் என்றார். தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாமல் இருப்பவர்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் சினிமாவில் தான் உச்சம் என பேசுபவருக்கே தன் மீது நம்பிக்கையில்லை எனவும் தவெக தலைவர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.


