தமிழ்நாட்டில் திமுகவுடன் தொடர்ந்து பயணித்து சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டு வரும் காங்கிரஸ் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறது.
இருப்பினும், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி, உள்ளாட்சி பதவிகளில் 20% என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முன்னெடுத்து வந்தனர்.
இதனால், ஒரு கட்டத்தில் திமுக-காங். கூட்டணியில் பிளவு ஏற்படும் அளவுக்கு சிக்கல் நீடித்ததால், கூட்டணி உடன்பாடு எட்டப்படாமல், கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க முடியாமல் இழுபறி நிலை நீடித்தது.
அப்படி தராவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைக்க மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக காங். மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் மூலம் காங். காய் நகர்த்தியது.
இதனால் அதிருப்தி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தானாக விலகட்டுமா அல்லது கூட்டணியை முறித்து கொள்ளலாமா என்ற மனநிலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், காங். மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சியில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியதில் கூட்டணி பேரம் முடிந்து தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுகிறது.
அதே நேரம், கூட்டணி சிக்கல் முடிந்தாலும், காங்கிரஸில் நிலவும் சிக்கல் தொடர்ந்தே வருகிறது. அரசியல் கட்சிகள் அவை போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல், பிரசாரம் என அடுத்தத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களை அறிவிப்பதிலேயே சிக்கல் நீடித்து வருகிறது.
இதனிடையே, காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக் குழுகூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது தமிழக அரசியலில் குறிப்பாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


