தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைவதால், இம்மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதியும், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 9ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, இம்மாநிலங்களின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் கூட்டணியில் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத் தாக்கலை முடித்துக் கொண்டு தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி சென்றுள்ள, மத்தியில் பாஜக ஆளும் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, அசாமில் பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு அங்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி என்டிஏ, கூட்டணி ஆட்சி அமைக்கும். அதே போல், மே.வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி பாஜ ஆட்சி அமைக்கும். கேரளத்தில் தற்போதைய ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பாஜ ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். நாகாலாந்து, மணிப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய குடியரசு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய அங்கீகாரம் கிடைக்க கட்சியை வலிமைப்படுத்தி வருகிறோம். நரேந்திர மோடி அரசு திடமான முறையில் நாட்டை வளர்ச்சி அடையச் செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


