தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நிலவரம் சூடுபிடித்து, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தானது.
திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேல்முருகனின் தவாக கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
அதே போல், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. கேட்ட தொகுதிகள் மற்றும் எண்ணிக்கை கிடைக்காததால் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகியது.
இதனிடையே, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து, கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவரது பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார். அதே போல, அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக என்டிஏ கூட்டணித் தலைவருமான இபிஎஸ், அக்கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையிலும் கூட, அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்வதற்காக நாளை மதியம் 12.35 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி மாலை 3.25 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுவை புறப்பட்டு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மாலை 4.15 மணிக்கு புதுவை சென்றடையும் அவர் அங்கு தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு, மாலை 5.50 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பி, இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க இருப்பதாகவும் நாளை மறுநாள் (ஏப்.4) காலை 10 மணிக்கு பாஜக நிர்வாகிகள் 150 பேருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் நாளை மறுநாள் நடக்க இருந்த பிரதமர் மோடி உடனான இந்த சந்திப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படாததால் நிர்வாகிகள் கூட்டத்தை மோடி ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என ஒரு சிலரை மட்டும் பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.


