தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி என 5 முனைப்போட்டி நிலவுகிறது.
இதில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடித்து வந்தது. இதனிடையே டெல்லியில் வேட்பாளர் பட்டியல் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பாஜக தரப்பில் போட்டியிடும் 27 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
அதன்படி, சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, ஆவடியில் ராஜசிம்ம மகேந்திரா, தளியில் நாகேஷ்குமார், திருவண்ணாமலையில் ஏழுமலை, ராசிபுரம் (தனி) தொகுதியில் பிரேம்குமார், திரூவாரூரில் கோவி சந்துரு, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார், உதகையில் போஜராஜன், திருப்பூர் தெற்கில் தங்கராஜ், தஞ்சாவூரில் முருகானந்தம், கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் உதயகுமார் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
மேலும், புதுக்கோட்டையில் ராமச்சந்திரன், அறந்தாங்கியில் கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூரில் திருமாறன், மானாமதுரை (தனி) தொகுதியில் பொன். பாலகணபதி, மதுரை தெற்கில் ராம ஸ்ரீனிவாசன், ராமநாதபுரத்தில் நாகேந்திரன், திருச்செந்தூரில் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் ஆனந்தன் ஐயாசாமி, ராதாபுரத்தில் பாலகிருஷ்ணன், நாகர்கோவிலில் காந்தி, குளச்சலில் சிவக்குமார், பத்மநாபபுரத்தில் ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


