தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி சூடு பிடித்துள்ள அரசியல் தேர்தல் களத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏப்.2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இறுதிநாளான இன்று வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எடப்பாடியில்அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தருமபுரியில் சவுமியா அன்புமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1989, 1991 2011, 2016, 2021ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இபிஎஸ்வெற்றி பெற்றுள்ளார். தற்போது 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் களம் காண்கிறார்.
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், 210 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெல்லும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடரும் எனவும் ஆட்சிக்கு வந்த பிறகு விடுபட்ட திட்டங்களும் நிறைவேற்றித் தரப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய இபிஎஸ், வரும் 15ஆம் தேதி குமரியில் பிரதமர் பரப்புரையில் கலந்துகொள்ள இருப்பதாகவும், திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் சொல்வது அறியாமையின் வெளிப்பாடு என்றும் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6, 2026 (இன்று) மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது. ஏப்.7ல் மனுக்கள் பரிசீலனையும், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். மேலும், ஏப். 9ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 30ல் தொடங்கி, நேற்று( ஏப்.5) வரை சுமார் 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


