தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி, சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களத்தில், இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று அதிமுகவில் இபிஎஸ், தேமுதிகவில் பிரேமலதா, பாமக அன்புமணி தரப்பில் சவுமியா அன்புமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக அதற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் வேட்பு மனுதாக்கல் செய்யும் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பிரதமர் மோடி, அமித் ஷா சொல்படியே முதல்வர் வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாடு வரும் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாகனங்களை தேர்தல் ஆணையம் சோதனையிடுமா?
24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து முதல்வர் வாகனத்தில் சோதனை நடத்தியவர்கள், பிரதமர் வாகனத்தில் சோதனை நடத்துவார்களா? பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், படை பரிவாரத்தோடு பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். பிரதமர் உள்பட எத்தனை மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வந்தாலும் இங்கு வெல்ல முடியாது. தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியே பெரும் வெற்றி பெறும் என்று சூளுரைத்தார்.


