தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஏப்.9) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாகவும் மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும், 2வது கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப். 29ம் தேதியும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, இம்மாநிலங்களில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பரப்புரை வேட்புமனு தாக்கல் என இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலங்களில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.


