தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வலம் வருபவர் திரிஷா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்தது மட்டுமின்றி, இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும், தக் ஃலைப் படத்திலும் நடிப்பில் மிரட்டி இருந்தார். இப்படங்களில் இவரது கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.
இவர் நடிப்பில் கடந்தாண்டு, விடாமுயற்சி',குட் பேட் அக்லி’, தக் லைஃப்' ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளகருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் விஷ்வம்பரா' மற்றும் மோகன்லால் நடிப்பில்ராம்’ ஆகிய படங்களில் நடிப்பதாக கமிட் ஆனார். இந்தப் படங்களுக்கு பிறகு திரிஷா எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமானதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், திரிஷா சினிமாவிலிருந்து விலக போவதாக தகவல்கள் பரவிவந்தன. இது குறித்து பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலின் நிகழ்ச்சியொன்றில் திரிஷா இனி நடிக்க மாட்டார் என செய்திகள் பரவுகிறதே அது உண்மையா என நேயர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகை திரிஷா பற்றி வெளியாகியிருக்கும் அந்த செய்தி உண்மைதான் எனவும் சமீபத்தில் சில தயாரிப்பாளர்கள் கூட அதை உறுதிபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் திரைப்படங்களில் நடிப்பதை தான் விட்டுவிட்டதாகவும், பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், 4 குழந்தைகளை வளர்த்து வருவதாகவும் நேற்றுடன் அவர்களுக்கு 2 வயது பூர்த்தி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இறுதியாக, இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா, இல்லை இன்றைய கற்பனை கதைக்கானதை முடித்துவிட்டோமா? என்று பதிவிட்டுள்ளார்.


