கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆகிய 3 கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கேரளாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 39 லட்சத்து 21 ஆயிரத்து 868 ஆகவும் ஆண் வாக்காளர்கள் ஒரு கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 811 ஆகவும் உள்ளது. அதாவது பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 7 லட்சம் அதிகமாக உள்ளனர். ஆனால் 42 பெண்கள் மட்டுமே முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் 2 கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 722 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் இன்று காலை வாக்களித்தார். அதே போல், கேரள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி ஆகியோரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றினார்.


