சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் நேற்று மாற்றியது.
மேலும், புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலையும் நியமித்து அவர்கள் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாக தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது எனவும் அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜகவிற்கு தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதாகவும் பாஜக ஆளும் அசாமிலும், பாஜக பிராக்சி ஆட்சி நடைபெறும் பீகாரிலும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தினர் என்பதால் அவர்களை பாஜகவின் தூண்டுதலில் மாற்றியிருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கைகோர்த்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போக துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல எனவும் ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல் சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து என வேதனைத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமருக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை மாற்ற பாஜக தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுவதாகவும் எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இறுதியாக, சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அதிமுக – பாஜக அடங்கிய என்டிஏ கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


