தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, புதுச்சேரியில் பிரசாரம் செய்த ராகுல் திமுகவின் பெயரையோ, ஸ்டாலினின் பெயரையோ உச்சரிக்காமல் காங். மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசியதாக கூறினார்.
அது மட்டுமின்றி, ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அதே நாளில் ஸ்டாலினும் அங்கு பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. அதே போல், ஸ்டாலினும் தனது பிரசாரத்தில் ராகுல் பெயரை பயன்படுத்தவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி கோவை விமான நிலையம் வந்து இங்கிருந்து மறுவிமானம் மூலம் செல்கிறார். ஆனால், கோவை மாவட்டத்தில் போட்டியிடும் 2 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூட அவர் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. புதுச்சேரிக்கும், தமிழ்நாட்டிற்கும் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை வந்து சென்றுள்ளார் என்பதை எண்ணி பாருங்கள். இதில் இருந்தே இந்தியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பது தெரிகிறது.
ராகுல் காந்தியே தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற வேண்டாம் என நினைக்கிறார் என்பது போல் இருக்கிறது எனக் கூறிய அவர், திமுக கூட்டணிக்கு பிரசாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வருவாரா என்பது சந்தேகமே என விமர்சித்தார்.


