ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்தும் நடத்தும் தாக்குதல் ஏறக்குறைய 40 நாட்களைக் கடந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பதற்ற சூழலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் முக்கிய நீர் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை பேரல் ஒன்று 99 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2 வார போர் நிறுத்தம் காரணமாக நேற்று 91 அமெரிக்க டாலராக குறைந்தது. இன்று மீண்டும் 97 டாலராக நிலை கொண்டுள்ளது. இதனால், உலகளவில் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும், பல்வேறு நகரங்களில் வர்த்தக சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களில் விலையேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்ற கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதித்தது.
கடந்த பிப்.28ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் 22 இந்தியக் கப்பல்கள் பெர்ஷியன் வளைகுடாவில் சிக்கியிருந்த நிலையில், மத்திய அரசு, தூதரக ரீதியாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, ஷிவாலிக், நந்தா தேவி, ஜக் லட்கி, ஜக் பிரகாஷ், ஜக் வசந்த், பைன் கேஸ், பிடபிள்யூ.டி.ஒய்.ஆர். மற்றும் பிடபிள்யூ. இ.எல்.எம். ஆகிய 8 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை வந்தடைந்துள்ளன.
வளைகுடா பகுதியில் இந்தியக் கடற்படையின் ‘ஊர்ஜா சுரக்ஷா’ பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த கப்பல்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன.
இந்நிலையில், இந்தியக் கொடி ஏற்றப்பட்ட ‘கிரீன் ஆஷா’ எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மும்பை வந்தடைந்துள்ளதாக ஜவகர்லால் நேரு துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றும், மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பிறகு ஜவகர்லால் நேரு துறைமுக ஆணையத்தை வந்தடைந்த முதல் கப்பல் இதுவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய மோதலுக்கு மத்தியில், இந்தியா அதற்கான எரிசக்தி வினியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள இது மேலும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உள்நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வினியோகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், எல்பிஜியிலிருந்து குழாய்வழி (பைப்லைன்) இயற்கை எரிவாயுவுக்கு மாறுவதை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.


