தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து ஏப்ரல் 6ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதன் பின்னர், ஏப்.7ம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில் 5,072 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத 2,464 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமார் வேட்புமனு மற்றும் அவருக்கு மாற்றாக வேட்புமனு தாக்கல் செய்த தவெக நிர்வாகியின் வேட்புமனு ஆகியவை நிராகரிக்கப்பட்டன. இதனால் 233 தொகுதிகளில் மட்டுமே தவெக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதே போல், நேற்று வரை 70க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்ட நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.
இதன்படி, 159 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதன்பின் தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து இன்று மாலையே சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை முதல் அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்கும். தொடர்ந்து பயிற்சிக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


