தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 3 மாநிலங்களிலும் பதற்றமான தொகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாநிலங்களின் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து 11 மணிக்கு வெளியானத் தகவலின்படி, கேரளாவில் 33.29% புதுச்சேரியில் 37.06% அசாமில் 38.94% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதன் பிறகு, மதியம் 1 மணிக்கு வெளியான இம்மாநிலங்களின் வாக்குப்பதிவு நிலவரப்படி, கேரளத்தில் 46.20% புதுச்சேரியில் 55.41% அசாமில் 58.26% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் 78.03% அசாமில் 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.


