கோவையில் நடந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்கா 50% வரி விதித்த போது நாட்டில் உள்ள மீனவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி நன்மை பெறச் செய்தார் பிரதமர் மோடி என்றார்.
அதே போல் வளைகுடா போர் பதற்றத்தால் உலகம் முழுவதும் பெட்ரோலுக்கு பல பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் அது போன்று நடக்கவில்லை. ஏனென்றால் அதை கவனமாக கையாண்டு மக்களுக்கு தேவையானவற்றை சரியான நேரத்தில் அரசு வழங்குகிறது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. நல்ல மாநிலத்தில் இது போன்ற ஊழல் நடந்துவருகிறது. மது ஊழல், நில ஊழல், மண் திருட்டு ஆகியவை நடந்து வருவதாகவும், இவை அனைத்திற்கும் ஸ்டாலினும் அவரது மொத்த குடும்பமும் தான் காரணம். இதனால் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இளம் தலைமுறையினர் யாருக்கும் ஸ்டாலினின் குடும்ப அரசியல் பிடிக்காது. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைந்தால் அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார்.
தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை, வாக்கு சதவீதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், விஜய் அரசியல் வந்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று அரசியல் வாழ்க்கையை கற்று கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரும் சினிமாவில் இருந்துதான் வந்தார். ஆனால் அவர் அரசியலில் வந்த உடனே முதல்வராகி விடவில்லை. முதலில் திமுகவில் இருந்து பல வருடங்கள் கற்று தேர்ந்தார்.
படிப்படியாக ஒவ்வொரு பதவிகளை பெற்று சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகே முதல்வரானார். அதே போல் ஜெயலலிதாவும் 10 ஆண்டுகளுக்கு பின்னரே முதல்வரானார். அவர்களை பார்த்து விஜய்யும் கற்று கொண்ட பிறகே முதல்வராவதை பற்றி நினைக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று விமர்சித்தார்.


