தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளதால், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
அதே நேரம், அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனையொட்டி சூடுபிடித்துள்ள அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பரப்புரையில் களமிறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக வென்றாலும் என்டிஏ கூட்டணி ஆட்சிதான் அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியாக மட்டுமின்றி என்டிஏ கூட்டணி ஆட்சியாக இருக்கும். மத்தியில் இருப்பது போலவே தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சியாக அமையும்.
கடந்த 2014ல் டெல்லியில் பாஜக பெரும்பான்மையுடன் வென்றபோதும் சிறிய கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்பட்டது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு அளிக்கப்பட்டது.
டெல்லியை போலதான் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி அமைப்பார். அமைச்சரவையில் பாஜக, கூட்டணி கட்சிகள் இடம்பெறும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தற்போது தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக அதிமுக முகாமில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே தேர்தல் முடிவுக்கு பிறகு, ஆட்சி அமைக்க தேவைப்படும் பட்சத்தில் தவெக தலைவர் விஜயின் ஆதரவு கோரப்படும் என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


