தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறவிக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் 2026ல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்பட 24க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதே போல், அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனையொட்டி சூடுபிடித்துள்ள அரசியல் கலவரத்தில் வேட்பாளர் அறிவிப்பு, இறுதி பட்டியல் வெளியீடு, தேர்தல் பரப்புரை என அனைத்து கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
மேலும், அங்கிருந்த பொதுமக்களுடன் கை குலுக்கி, கலந்துரையாடி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.
அதன் பிறகு, பேட்டி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் எழுச்சியை பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்று தெரிகிறது. திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதிமுக அடிமையாகிவிட்டதால் டெல்லிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. தோல்வியின் உச்சத்துக்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
என்ன செய்தாலும், பாஜக தலைவர்கள் எத்தனை பேர் படையெடுத்து வந்தாலும் திமுக வெற்றியைத் தடுக்க முடியாது. நடிகர் பின்னால் சென்று விபத்துகள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக என்ற திராவிடக் கட்சி டெல்லியிடம் அடகு வைக்கப்பட்டது வெட்ககேடாகவும், வேதனையாகவும் உள்ளது.
வேதனையை மட்டும் தரும் பாஜக, துரோகங்களை மட்டுமே செய்யும் அதிமுகவை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திமுக தொடர்ந்து ஆட்சி செய்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்று 2031ல் காட்டுவோம் என்று கூறினார்.


