தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், தற்போது சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு, தெற்கு தொகுதிகளில் பிரசாரம் செய்த போது கரூர் வேட்பாளரின் பேட்டரி கழற்றப்படும் என விமர்சித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரோபோ யாரு? பேட்டரி யாரு? என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். 5 முறை தேர்தலில் நின்று ஜெயித்திருக்கிறேன். மக்களால் புறக்கணிக்கப்பட்டு இரண்டு தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
இரண்டு முறை மக்களாலும் தற்போது கட்சியாலும் புறக்கணிக்கப்பட்டவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர் பியூஸ் போன பல்பு. அதைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


