இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாக பணவீக்கத்தை ஏற்படுத்துவதால், பங்குகளின் மதிப்பு குறைய தொடங்குகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை இந்திய பங்குச்சந்தைகளிலிருந்து வெளியே எடுத்து செல்வதும் இந்த வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்காக அமெரிக்க சந்தைகளுக்கு திரும்புவதால், இந்திய சந்தையில் பணப்பரிவர்த்தனை குறைவதால், விற்பனை அழுத்தம் அதிகரித்து, பங்குகள் தொடர்ந்து சரிவை சந்திக்கின்றன.
இதனிடையே, அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததால், கச்சா எண்ணெய் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவித்தது.
இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை இன்று காலை அதிரடியாக 7% அதிகரித்து பேரல் ஒன்று சுமார் 94 முதல் 104 அமெரிக்க டாலர் என்ற அளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை கடும் சரிவுடன் தொடங்கியது. காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,622 புள்ளிகள் சரிந்து 75,928 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,589 புள்ளிகளில் வர்த்தகமானது.


