அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களை தொடர்ந்து கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய நீர்வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% கையாளும் இந்த நீரிணை மூடப்பட்டதால் இந்தியா உள்பட சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை இந்தியாவின் 8 கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வெற்றிகரமாக இந்திய துறைமுகங்களை வந்தடைந்துள்ளன.
ஈரான் போர் உச்சத்தில் இருக்கிறது. எனவே, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணிப்பது சவாலானதாக மாறியுள்ள இச்சூழலில், ஈரானில் இருந்து 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன.
அமெரிக்க தடைகளுக்குப் பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை ஆகும். இவற்றில் ஃபெலிசிட்டி என்ற கப்பல் குஜராத் மாநிலம் சிக்காவில் உள்ள துறைமுகத்திலும், ஜெயா என்னும் மற்றொரு கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கப்பல்களிலும் தலா 20 லட்சம் பீப்பாய்கள் வீதம், மொத்தம் 40 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்தியா வந்துள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் பதற்றமான சூழலில், இந்த 2 கச்சா எண்ணெய் கப்பல்களின் வருகை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கச்சா எண்ணெய் வந்ததைத் தொடர்ந்து, ஈரானில் இருந்தும் கச்சா எண்ணெய் வரத் தொடங்கியுள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த இறக்குமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
