தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8, சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 5, மதிமுகவுக்கு 4, ஐயூஎம்எல் 2, மமகவுக்கு 2, கொமதேகவுக்கு 2 உள்பட இதுவரை 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அலுவலகத்தில் வெளியிட்டார்.
அதில், விலையில்லா கல்வி, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 15 கருப்பொருள்கள் முக்கியமானவையாக இடம்பெற்றுள்ளன.
மேலும், சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம், மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு, உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம் ஆகியவையும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளாக உள்ளன.
