தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், தற்போது சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவதைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வரும் 20ம் தேதி சென்னை வருகை தரும் கெஜ்ரிவால் ஏப். 20, 21ம் தேதிகளில் சென்னையில் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
