பீகாரில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
இதில், பாஜ 89, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 85, சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி ராம்விலாஸ் (எல்ஜேபிஆர்வி) 19, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா செக்குலர் (எச்ஏஎம்எஸ்) 5, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தேஜ கூட்டணி மொத்தமாக 202 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பீகாரில் மீண்டும் பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தது. நிதிஷ்குமார் தொடர்ந்து 10 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அதே நேரம், எதிர்க்கட்சிகளான ஆர்ஜேடி 25, காங்கிரஸ் 9, ஏஐஎம்ஐஎம் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.
இதற்கிடையே, பீகாரில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16ம் தேதி நடைபெற்ற தேர்தலில், பாஜ சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார், ஜேடியூ சார்பில் நிதிஷ் குமார், ராம்நாத் தாகூர் ஆகியோர் களமிறங்கினர்.
இதனிடையே, நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை எம்பியாக உள்ளதாகவும் அவரது மகன் நிஷாந்த்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் கடந்த மாதம் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, பீகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது.
அதனை நிறைவேற்றும் வகையில், இந்த முறை மாநிலங்களவை எம்பியாக விரும்புவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து அவர் முதல்வர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நிதிஷ் பீகார் அமைச்சரவையை இன்று காலையில் கலைத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை எம்பியாக பதவியேற்ற அவர் தற்போது பீகார் அமைச்சரவையை கலைத்துள்ளார்.
அமைச்சரவையை கலைத்த நிலையில், மாலையில் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்யக்கூடும் என தகவல் வெளியான நிலையில், பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை பீகாரின் தற்போதைய பொறுப்பு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் அவர்களை சந்தித்து வழங்கினார்.
நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து, பீகார் மாநில புதிய முதல்வர் பெயரை பாஜக விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
பீகாரின் புதிய முதல்வராக தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி அல்லது நித்யானந்த் ராய் அல்லது கிரிராஜ் சிங் ஆகியோர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
