இந்திய அரசியலமைப்பின் தந்தையும், சிறந்த சட்டமேதையும், சமூக சீர்திருத்தவாதியுமான அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராகவும், பட்டியல் இன மக்களின் உரிமைக்காகவும் போராடியவர் ஆவார்.
சமூக நீதியை நிலைநாட்ட பாடுபட்ட மாபெரும் தலைவரான அவர், இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக, நவீன இந்தியாவின் சட்டக் கட்டமைப்பை உருவாக்கினார்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அரசால் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.
அவர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர் அண்ணல் அம்பேத்கர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்க பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
