மத்திய அரசு தொகுதி மறுவரை செய்யும் நடவடிக்கை எடுத்தால், தமிழ்நாடு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சாதனைப்படுத்திய தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரை தண்டனையா? தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துள்ள பேராபத்தை தடுத்து நிறுத்துவோம். நாளை மறுநாள் நாடாளுமன்றம் வலுக்கட்டயமாக கூட்டப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை கொண்டு வரப்பட்டால் தமிழ்நாடு முழு அளவிலான போராட்டத்தில் ஈடுபடும். தேர்தல், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு 2ம் பட்சம் தான். சுயமரியாதைக்காரர்களான எங்களுக்கு கொள்கையும், சுயமரியாதையும் தான் முக்கியம்.
தொகுதி மறுவரையறைால் பாதிக்கப்படும் மாநிலங்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் மத்திய அரசு இதனை செயல்படுத்த முயற்சிக்கிறது என்று சாடியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்போம். மோடிக்கு தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை; என்னுடைய தலைமையில் போராட்டத்தை முன்னெடுப்பேன். கடந்த 1950-60 கால கட்டத்தில் இருந்த பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டியிருக்கும். இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை மோடி பார்க்க வேண்டியிருக்கும்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கி போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
