தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் மத்திய அரசு இதனை செயல்படுத்த முயற்சிக்கிறது.
தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் தமிழ்நாடு முழு அளவிலான போராட்டத்தில் ஈடுபடும். பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டியிருக்கும். இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை மோடி பார்க்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கடிதம் எழுதிருந்தார்.
அதில், தென் மாநிலங்கள் ஒரே குரலில் ஒன்றுபட்டு, கூட்டாட்சியின் உண்மையான தத்துவத்தை நிலை நிறுத்துவோம். உரிமைகளைப் பாதுகாக்கவும், வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ எதிர்காலத்தை உறுதி செய்யவும் ஒன்றுபடுவோம்” என மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று காலை காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
