நாரி சக்தி வந்தன் அதினியம் என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டம், 2023ஐத் திருத்தும் 131வது அரசியல் சட்ட திருத்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
வரும் 2029 பொதுத்தேர்தலில் இதனை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரை நாளை முதல் 3 நாட்கள் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மக்களவையில் விவாதத்திற்கு வரும் 3 முக்கியமான மசோதாக்களில் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயரும்.
மேலும், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதை எளிதாக்கும் நோக்கில் இந்த இட அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, 2026ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
தற்போது, 2011 கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடும்.
அதே நேரம், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத உ.பி, பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு இந்த தொகுதி மறுவரையறை சாதகமாக அமையும்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகளிருக்கான ஒதுக்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும் என பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.
