ஐபிஎல் 19வது தொடரின் 23வது லீக் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்ந்தது. இதையடுத்து லக்னோவின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் களமிறங்கினர். ரசிக் சலாம் வீசிய 4வது ஓவரில் அய்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்த நிலையில் காயத்துடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் 1 ரன்னில், ஜோஷ் ஹேசல்வுட் பந்தில் கிளீன் போல்டானார். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் (32 பந்து, 40 ரன்), க்ருணால் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
12வது ஓவரில் க்ருணால் பாண்டியா வீசிய பந்தை எதிர்கொண்ட அப்துல் சமத், ரன் எடுக்காமல், ரஜத் படிதாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின், ரசிக் சலாம் வீசிய 16வது ஓவரில் ஆயுஷ் படோனி (24 பந்து, 1 சிக்சர், 4 பவுண்டரி, 38 ரன்) விழ்ந்தார்.
விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்ததால், ஏற்கனவே காயமடைந்து வெளியேறிய கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் களத்தில் இறங்கினார். இருப்பினும், புவனேஸ் குமார் வீசிய 17வது ஓவரில் ரிஷப் (1 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறப்பாக பந்து வீசிய புவனேஸ் குமார், 19வது ஓவரில் ஜார்ஜ் லிண்டே (7 ரன்), முகம்மது ஷமி (0 ரன்) ஆடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து, லக்னோ அணியை நிலைகுலையச் செய்தார். கடைசி ஓவரில் முகுல் சவுத்ரியை (28 பந்து, 2 சிக்சர், 3 பவுண்டரி, 39 ரன்), ரசிக் சலாம் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆவேஷ் கான் (1 ரன்), கிளீன் போல்ட் ஆனார். இதனால், 20 ஓவரில் லக்னோ அணி 146 ரன்னுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது.
பெங்களூரு தரப்பில் ரசிக் சலாம் 4, புவனேஸ் குமார் 3, க்ருணால் பாண்டியா 2, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. இறுதியில் 15.1 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணி 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆர்சிபி தரப்பில் கோலி 49, ரஜத் படிதார் 27, ஜிதேஷ் ஷர்மா 23 ரன்கள் எடுத்திருந்தனர். டிம் டேவிட், ஷெப்பர்ட் தலா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னோ அணி பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவ் 3, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


