சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வாரத்தின் முதல் நாளான திங்களன்று மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, கிராம் ரூ.14,060க்கும் விற்பனையானது.
இதைத் தொடர்ந்து, செவ்வாயன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், நேற்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ.800 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360 ஆக விற்பனையாகிறது.
இதன் மூலம், கடந்த 14ம் தேதி சவரனுக்கு ரூ.1,280, 15ம் தேதி ரூ.800, இன்று ரூ.320 என கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்துள்ளது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275 ஆக விற்பனையான நிலையில், இன்று எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற, இறக்கம் அதன் நிலையற்றத்தன்மை தங்கத்தில் முதலீடு செய்பவர்களை மட்டுமின்றி, நகை வாங்கும் தேவையில் உள்ள நடுத்தர மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


