தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், மத்திய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543லிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026 மூலம், மக்களவையின் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா இன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த தொகுதி மறுவரையறையினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும், இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அறிவிப்பை ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த மாநிலத்திற்கு தண்டனையையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு வெகுமதியும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைவதாக தவெக தலைவர் விஜய் சாடியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப்பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.
தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு மசோதா 2026 நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிடும்படி விஜய் வலியுறுத்தியுள்ளார்.


