தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இதனிடையே, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்றோர் ராகுலுக்கு திமுக உடனான கூட்டணி பிடிக்கவில்லை. எனவே அவர் கூட்டணி பிரசாரத்துக்காக தமிழகம் வருவது சந்தேகமே என்று பேசி வந்தார்.
ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்தது. முதல்வரின் பிரசாரத்துக்கு ஏற்றவாறு தேதியை முடிவு செய்வதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் தலைமை இறங்கியது.
இதனிடையே இன்று முதல் வரும் 18ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கன 33% இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவு பற்றிய விவாதம் தொடங்குகிறது. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரத்தை 20, 21ம் தேதிகளில நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 20ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
அதை தொடர்ந்து, 21ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் ஒரே மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். ஆனால் எந்த இடம், நேரம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


