தமிழரை சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று முதல் 3 நாள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கல் தாக்கலாகின்றன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. முதல்வர் இல்லம், கோபாலபுரத்திலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை பயணத்தில் நாமக்கல்லில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் கருப்புக் கொடி ஏற்றினார். முதல்வர் கருப்புச் சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் போராட்டம் நடத்தினார். அப்போது மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதே என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கமிட்டனர். மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என முதல்வர் குற்றம் சாட்டினார்.
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. சென்னையில் மதிமுக அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு சாதகமாக தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதாக விமர்சித்து, அனைத்து மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, வார்டு, பூத் அளவில் 11 மணிக்கு மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வீடுகள், வணிக வளாகங்களிலும் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கருப்புக் கொடியை பறக்கவிடுமாறு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும். பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்பு தீ டெல்லியைச் சுட்டெரித்தது; டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ என்று கூறியுள்ளார்.
