வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
வார இறுதி நாட்களான நாளை மற்றும் ஏப். 18, 19 தேதிகளில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மற்றும் 18ம் தேதி (சனிக்கிழமை), 19ம் தேதி (ஞாயிறுக்கிழமை), வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 295 பேருந்துகள், 18ம் தேதி (சனிக்கிழமை) 310 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பேருந்துகள், சனிக்கிழமை (ஏப்.18) அன்று 55 பேருந்துகள் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் மாதவரத்திலிருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
