தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கருப்பு’. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இத்திரைப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆல்பம் சாங்ஸ் மூலம் ஏற்கனவே பிரபலமாகியுள்ள சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்த படம், கடந்தாண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இதனிடையே, இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியானது.
தற்போது இந்தப் படம் கோடை வெளியீடாக மே 14ம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கருப்பு படத்தின் முதல் சிங்கிள் காட் மோட் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து 2வது சிங்கிளான `நாங்க நாலு பேரு’ பாடல் கடந்த மாதம் வெளியானது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் 3வது பாடலாக `ராத்து ராசன்’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.
முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருந்து பின்னர் அவர் விலகிவிட்டார்.
இந்நிலையில், இப்படம் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் வெளியான பிறகு, நானும் ஏ.ஆர்.ரஹ்மான் சாரும் சந்தித்தோம். அப்போது நாம் இணைந்து பணியாற்றலாமா என்று ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே கேட்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன், அவரிடம் கருப்பு படத்தின் கதையை விவரித்த பின், அவர் சிறப்பாக செய்யலாம் என்று கூறியதாகவும் அதன் பின்னர் இருவரும் 5 முறை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகள் காரணமாக, தன்னால் இந்தப் படத்தை கச்சிதமாகச் செய்ய முடியுமா என்று தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் கருப்பு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதால், இப்போது என்ன செய்யலாம்?’ எனவும் கேட்டதாகக் கூறிய ஆர்ஜே பாலாஜி, தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாகவும், உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டதால், சாய் அபயங்கரின் முந்தைய பணி பிடித்திருந்ததால், அவரை ஒப்பந்தம் செய்ததாகக் கூறினார்.
