இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று மக்களவைக்கு சென்ற திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அதே போல், சென்னையில் திமுக தலைமை அலுவலகம், கூட்டணி கட்சியான மதிமுக தலைமை அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லிபாளையத்தில் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி வரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் காந்தி வழிநடத்தும்படி முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக எம்.பி.க்கள் முழு ஆதரவளிப்பார்கள் என்று உறுதி அளித்திருக்கிறார்.
தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் திமுக எம்.பி.க்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என்று ராகுலிடம், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 430 உறுப்பினர்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்த நிலையில், மசோதாக்களை தாக்கல் செய்யலாம் என 275 பேரும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 185 பேரும் வாக்களித்திருந்தனர்.
