இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவை சென்ற திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அதே போல், சென்னையில் திமுக தலைமை அலுவலகம், கூட்டணி கட்சியான மதிமுக தலைமை அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லிபாளையத்தில் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி வரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் காந்தி முன்னின்று வழிநடத்தும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டு கொண்டுள்ளார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்கள் குரல் எடுபடாது. திட்டமிட்டு தென்னிந்தியாவை வஞ்சிக்கவே தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றாக கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், இதற்கான எதிர்ப்பு விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதியோடு இணைந்து நிற்கிறோம். பாஜகவின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. தொகுதி மறுவரையறையில் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு 48 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
