ஐபிஎல் 2026 தொடர் கடந்த மாதம் 28ம் தொடங்கி நடந்து வருகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்களான ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின.
இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 மேட்ச்களில் 2ல் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கேவை பொறுத்தவரையில் முதல் 3 போட்டிகளில் பந்துவீச்சில் குறைபாடு, பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட், மோசமான ஃபீல்டிங் என சொதப்பியதால் தோல்வியை தழுவ வேண்டியதாயிற்று. கடைசி 2 போட்டிகளில் தான் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்துள்ளது.
இந்த வெற்றிகளுக்கு சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது தான் முக்கிய காரணமாவார். கடந்த சீசனிலிருந்து புதிய பந்தில், பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தும் பவுலராக சிஎஸ்கேவில் சிறப்பாக விளையாடி வரும் கலீல் அகமது, தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது, பந்துவீச்சு பிரிவில் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
கேகேஆர் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பந்துவீசியபோது சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவுக்கு காயம் ஏற்பட்டது. மைதானத்திலிருந்து அவர் வெளியேறிய நிலையில், அவர் வீசிய ஓவரின் கடைசி பந்தை குர்ஜப்னீத் சிங் வீசினார்.
இந்த நிலையில், தற்போது ஸ்கேனின் போது அவருக்கு வலது தொடைப்பகுதியில் காயம் இருப்பதாகவும், அவர் குணமடைய 10 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்கத்தில் விக்கெட்டை வீழ்த்தும் கலீல் அகமது போன்ற பந்து வீச்சாளர் இல்லாமல் சிஎஸ்கே அணி மீதமிருக்கும் தொடரை எப்படி சமாளிக்கும் என்ற கவலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆரம்பத்தில் டெவால்ட் பிரேவிஸ் காயத்தால் 3 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தோனி இன்னும் அணிக்கு திரும்பவில்லை. ஒரே ஒரு டெத் ஸ்பெஷலிஸ்ட் பவுலர் நாதன் எல்லீஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். மாற்று வீரரான ஸ்பென்சர் ஜான்சனும் இதுவரை அணியில் இணையவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தற்போது கலீல் அகமதுவும் விலகியிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
