சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தங்கம் விலை வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை காலையில் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13.600க்கும், மாலையில் திடீரென கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதைத் தொடர்ந்து, செவ்வாயன்று சவரனுக்கு ரூ.1,280, புதன்கிழமை சவரனுக்கு ரூ.800, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும் விற்பனையான நிலையில், நேற்று சென்னையில் 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,210 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,360 ஆக விற்பனையாகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.275 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.280க்கும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற, இறக்கம் அதன் நிலையற்றத்தன்மை தங்கத்தில் முதலீடு செய்பவர்களை மட்டுமின்றி, நகை வாங்கும் தேவையில் உள்ள நடுத்தர மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

