நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய சிறிது நேரத்தில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் வகையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந்து 850 ஆக அதிகரிக்க செய்யும் தொகுதி மறுவரையறை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழகத்திலும் திமுக சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிலிட்டு எரித்தும் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு மொத்தமாகத் திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுனார்.
நேற்று முன்தினம் இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், 2023ம் ஆண்டு சட்டத்தை அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. புதிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்த பழைய சட்டம் நடைமுறைக்கு வருவது தொழில்நுட்ப ரீதியாக அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
இம்மசோதா அரசிதழிழ் வெளியிடப்பட்டது குறித்து திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசிய போது, எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமானால் அவையில் பேசக் கூட முடியாது எனவும் மசோதா நிறைவேறாத போது அதனை எப்படி அரசிதழில் வெளியிடலாம் என்றும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த புதிய சட்ட நடைமுறைகளின் படி, நாடாளுமன்றத்தின் தற்போதைய பலமான 543 இடங்களை அதிகபட்சமாக 850 இடங்களாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய தென்மாநிலங்களின் அதிகாரம் குறையும் என்ற அச்சம் நிலவியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் புள்ளிவிவரங்களுடன் கூடிய விளக்கம் அளித்தார்.
அதன்படி, மக்களவை இடங்கள் 850 ஆக உயர்ந்தாலும், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்று உறுதியளித்தார். தற்போதுள்ள 543 இடங்களில் 5 தென் மாநிலங்கள் 129 இடங்களுடன் 23.76% பங்களிப்பைக் கொண்டுள்ளன. புதிய முறையின்படி 850 இடங்களில் அந்த மாநிலங்களுக்கு 195 இடங்கள் கிடைக்கும் என்று விளக்கினார்.
மாநில வாரியான தரவுகளின் படி, கர்நாடகாவிற்கு 28 இடங்களிலிருந்து (5.15%) 42 இடங்களும் (5.14%), ஆந்திராவிற்கு 25 இடங்களிலிருந்து (4.60%) 38 இடங்களும் (4.65%), தெலங்கானாவிற்கு 17 இடங்களிலிருந்து (3.13%) 26 இடங்களும் (3.18%) கிடைக்கும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பமாக, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான 3 முக்கிய மசோதாக்கள் மீதான காரசார விவாதங்கள் நடைபெற்றது.
அதன் பிறகு, தொகுதி மறுவரையறை மசோதா மீது நடத்திய வாக்கெடுப்பில், மொத்தம் பதிவான 489 வாக்குகளில் மசோதாவுக்கு ஆதரவாக 278, எதிராக 211 வாக்குகள் பதிவானது. மசோதா வெற்றி பெற பதிவான வாக்குகளில் 3 ல் 2 பங்கு வாக்குகள் தேவையாகும். மசோதா வெற்றி பெற தேவையான 326 வாக்குகளுக்கு பதிலாக 278 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்தது.
மசோதா தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடிய உடனேயே இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக வந்தே மாதரம் பாடலோடு கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது.

