அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இஸ்ரேல்–லெபனான் 10 நாள் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், 3 முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ள ஈரான், நிபந்தனை மீறப்பட்டால் நீரிணை மீண்டும் உடனடியாக மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து கடந்த பிப். 28ம் தேதி தாக்குதல் தொடுத்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனால் 2 வார காலம் இடைக்கால போர் நிறுத்தம் அமலானது. இருப்பினும், இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்தி வந்தது. இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ஈரான் வலியுறுத்தியது.
நேற்று இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஹோர்முஸ் நீரிணையை அனைத்து வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, லெபனான் நாட்டுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கு 3 முக்கிய நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.
முதலாவதாக, வணிக நோக்கிலான கப்பல்கள் மட்டுமே நீரிணையை கடக்க அனுமதிக்கப்படும் எனவும் ராணுவக் கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, கப்பல்கள் ஈரான் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட குறிப்பிட்ட பாதைகளின் வழியாக மட்டுமே பயணிக்க ஈரான் நிர்பந்தித்துள்ளது.
மூன்றாவதாக, கப்பல்கள் கடந்து செல்வதற்கு முன், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை தலைமையகத்துடன் ஒருங்கிணைந்து அனுமதி பெற வேண்டும். மேலும், கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது, அதில் உள்ள பணியாளர்கள் யார், என்ன சரக்கு கொண்டு செல்லப்படுகிறது போன்ற விவரங்களை வழங்கவும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், ஒருவேளை கடற்படை முற்றுகை தொடருமேயானால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் ஈரான், அமெரிக்கா மத்தியஸ்த்தினால் விரைவில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என தகவல் வெளியான நிலையில், கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்த நிலையில், தற்போது ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டதன் மூலம் கச்சா எண்ணெய் பேரல் விலையில் சுமார் 9% வரையில் சரிவடைந்துள்ளது.
இதன் மூலம், இந்தியா உள்பட சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்து எரிபொருள், எரிவாயு விநியோகம் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

