தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து வாக்கு சேகரிக்க இன்று தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, பாஜகவின் கருவியாக மட்டுமே அதிமுக உள்ளது. பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுகவை பயன்படுத்துகிறது. தமிழ்நாடு என்கிற சிந்தனையையே மத்திய பாஜக அரசு தகர்க்க பார்க்கிறது. தமிழ்நாட்டு மக்களை மிகவும் நேசிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தமிழர்கள் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். எனது குடும்பத்துக்கு தமிழ்நாட்டுடன் எப்போதும் சிறப்பானதொரு உறவு உண்டு. தமிழ்நாட்டு மக்களின் டெல்லி படை வீரனாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. முதல்வர் ஸ்டாலின் சுதந்திரமானாவர். டெல்லி அழுத்தங்களுக்கு அடிபணியாதவர். அதனால் தான், ஸ்டாலினை அப்புறப்படுத்திவிட்டு தங்களது அழுத்தங்களுக்கு பணியும் முதல்வரை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

